வியட்நாமில் மருத்துவம் பயின்று வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 21 வயது மாணவர் அஷ்ரித், வேகமாக சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்து சுவரில் மோதி உயிரிழந்தார். இக்கோர விபத்து சம்பவம் ஜூன் 4-ஆம் தேதி நடந்தது.

அந்த பகுதியின் சிசிடிவி காட்சிகளில் இந்த விபத்து பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மூன்றாம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்த அர்ஷித், தெலங்கானா மாநிலத்தின் காகசுநகர் நகரைச் சேர்ந்த வியாபாரி அர்ஜுனின் மகன் ஆவார்.

விபத்து நேரத்தில் அர்ஷித் தனது 150cc பைக்கில் நண்பருடன் மிகவும் வேகமாக பயணம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. மழையால் வளைவில் கட்டுப்பாட்டை இழந்த அவர் எதிர்பாராத விதமாக சாலையின் பக்கத்தில் உள்ள கட்டிட சுவரில் மோதி விபத்துக்குள்ளான போது, அர்ஷித் மற்றும் அவரது நண்பர் இருவரும் காற்றில் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த மோசமான மோதலில் அர்ஷித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.  மருத்துவக் கனவுடன் வெளிநாட்டில் கல்வி பயின்று வந்த இளம் மாணவனின் மரணம், அவரது குடும்பத்தினருக்கு பேரழிவாக அமைந்துள்ளது.