ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. தற்போது அந்தத் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.

குறிப்பாக இறுதிப் போட்டியில் பங்கேற்கும் இரு அணிகளும் இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வெல்லாததால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் ரஜத் படிதார் இறுதிப் போட்டி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதில் அவர் கூறியதாவது, இறுதிப் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயரை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் இது ஒரு புதிதான சவால். அதற்கு ஏற்றவாறு தயாராகி உள்ளோம்.

18 வருட கடின உழைப்பு இந்திய அணிக்காகவும், பெங்களூர் அணிக்காகவும் விராட் கோலி நிறைய பங்காற்றியுள்ளார். அவரது விடாமுயற்சியை வீணாக்காமல் இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை நிச்சயம் வெல்ல முயற்சிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.