
திருச்சி மாவட்டம் துறையூரில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொள்ள உள்ளார். இதனால் அவர் நேற்று சென்னையில் இருந்து திருச்சிக்கு சென்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, திருச்சியில் 31ஆம் தேதி நடைபெற இருந்த மதசார்பின்மை காப்போம் பேரணி ஜூன் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் மட்டுமின்றி சட்டத்தின் மீதும் மதசார்பின்மை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். பல்கலைக்கழக விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதனை அவமதிக்கும் வகையில் குடியரசு தலைவரை கொண்டு பாஜக அரசு 14 கேள்விகளை கேட்க வைத்தது.
இந்தியா கூட்டணி வலிமையாக இல்லை என்று பா.சிதம்பரம் எதன் அடிப்படையில் கூறுகிறார் என்று தெரியவில்லை. ஆனால் இந்தியா கூட்டணி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் சந்தித்து ஒரு வருடம் ஆகிறது, தேவைப்படும்போது ஒன்றிணைந்து செயல்படுவோம். திமுக இந்திய கூட்டணியில் முக்கியமாக உள்ளது.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி தான் வடிவமாக உள்ளது. வேறு எந்த கூட்டணியும் வடிவத்தோடு இல்லை. அதிமுக பாஜக கூட்டணி இணைந்து தேர்தலை சந்திப்போம் என்று கூறுகிறார்கள் ஆனால் அவர்கள் கூட்டணி தொடருமா என்று தெரியவில்லை. அவர்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக, தேமுதிக தற்போது வரை கூட்டணி குறித்து எந்த நிலைப்பாடு எடுக்கவில்லை.
தற்போது எதிர்கட்சிகள் ஐக்கியமாக போதிய முகாந்திரங்கள் இல்லை. தமிழ்நாட்டில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வலுவாக உள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.