
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள நெய்வேலியில் சிலர் அனுமதியின்றி நாட்டு வெடிகள் தயாரித்து ஒரு குடோனில் வைத்துள்ளனர். இன்று காலை திடீரென குடோனில் இருந்த நாட்டு வெடிகள் வெடித்ததால் பயங்கர சத்தம் கேட்டுள்ளது.
அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் அந்த குடோனிற்கு சென்று பார்த்தபோது பட்டாசுகள் வெடித்து இரண்டு பேர் இறந்து கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறையில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
பின்னர் விபத்தில் பலியான இருவரும் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்த போது, அதே பகுதியை சேர்ந்த சுந்தர்ராசு(60), முகமது ரியாஸ்(18) என்பது தெரியவந்தது. பின்பு அவர்களது உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.