காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா தாக்கியது.

இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில் பாகிஸ்தான் இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் மூன்று நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு முன்பே சிறிய அளவிலான துப்பாக்கி சூடு தாக்குதல்களை நடத்திய நிலையில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பெரிய அளவில் தாக்குதல் நடத்தியது.

இருப்பினும் இந்திய ராணுவம் அதனை ஆரம்பத்திலேயே வெற்றிகரமாக தகர்த்தெறிந்தது. பாகிஸ்தான் தாக்குதல்களை இந்தியா முறியடித்ததோடு இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள ராணுவ தளங்கள் உள்ளிட்ட பகுதிகளின் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே போர் நடக்கக்கூடாது என்று உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு முக்கிய பதிவை போட்டுள்ளார். அதாவது தற்போது நடந்து வரும் சண்டையை நிறுத்துவதற்கு பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஒப்புக்கொண்டதாக அவர் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பான நேரடி பேச்சுவார்த்தைக்கும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக அவர் எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார்.