
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, கால்நடை உள்ளிட்ட மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இந்த நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இன்று நாடு முழுவதும் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் அறைக்குள் கைப்பேசி, கைகடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு செல்ல அனுமதி கிடையாது. இதேபோல கம்மல், மூக்குத்தி, பெல்ட், முழுக்கை சட்டை அணியக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி மையத்தில் சுடிதாரில் அதிக பட்டன்கள் இருந்ததால் ஒரு மாணவிக்கு நீட் தேர்வு மையத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டது. உடனே பெண் போலீஸ் ஒருவர் அந்த பெண்ணை இருசக்கர வாகனத்தில் ஜவுளி கடைக்கு அழைத்துச் சென்று புதிய ஆடை வாங்கி கொடுத்து மீண்டும் தேர்வு மையத்திற்கு அழைத்து வந்து உதவினார்.