பிரேசிலின் போர்டோ அலேக்ரே நகரில், உலகின் முதிய நபராக கருதப்பட்ட கத்தோலிக்க கன்னியர் சகோதரி இனா கனாபாரோ லூகாஸ் ஏப்ரல் 30, 2025 (புதன்கிழமை) அன்று மரணமடைந்துள்ளார். அவருக்கு 116 வயதும் 326 நாட்களும் ஆனது. இவர் 1908ம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி பிறந்தவர். ‘தெரேசியன் சிஸ்டர்ஸ் ஆஃப் பிரேசில்’ என்ற கத்தோலிக்க அமைப்பின் உறுப்பினராக இருந்த இவர், தனது வாழ்நாளையே அர்ப்பணிப்புக்கும் பக்திக்கும் செலவிட்ட சிறப்புமிக்க நபராக அமைந்திருந்தார். அவரது மறைவுக்கு பிரேசிலின் பிரபல கால்பந்து அணி ‘இன்டர்நாசியனல்’ சமூக வலைதளத்தில் அஞ்சலியளித்து “ஆன்மிகம் மற்றும் கருணையின் அடையாளம்” எனப் புகழ்ந்ததுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு 116 வயதில் உயிரிழந்த ஜப்பானின் தோமிகோ இதோகா மரணத்திற்கு பின்னர் உலகின் முதிய நபராகப் பதிவானவர். இவர் தன்னுடைய 110-வது பிறந்த நாளின் போது, ரோமில் இருந்து நேரடியாக போப் பிரான்சிஸிடமிருந்து ஆசீர்வாதமும் பெற்றிருந்தார். இவர் மட்டும் அல்லாமல், தற்போது உலகின் முதிய ஆண் நபராகக் கருதப்படும் ஜோவோ மரிணோ நேட்டோ (112) என்பவர் பிரேசிலின் சியேரா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் கின்னஸ் சாதனை புத்தகம் உறுதி செய்துள்ளது.

இனா லூகாஸின் மறைவுக்கு பிறகு, இங்கிலாந்தின் சர்ரி மாகாணத்தைச் சேர்ந்த எத்தல் கட்டர்ஹாம் (Ethel Caterham) என்பவர் தற்போதைய உலகின் முதிய நபராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 1909 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி ஹாம்ப்ஷயரில் உள்ள ஷிப்டன் பெல்லிங்கர் என்ற கிராமத்தில் பிறந்தவர். தற்போது இவருக்கு 115 வயதும் 252 நாட்களும் ஆகிறது. எட்வர்ட் ஏழாம் அரசனின் ஆட்சிக்காலத்தில் பிறந்த இறுதியான பிரிட்டன் குடிமகளாகக் கருதப்படுகிறார். 115வது பிறந்த நாளை கடந்த ஆண்டு கொண்டாடிய இவர், இவ்வளவு வயதை எட்டிய மூன்றாவது பிரிட்டன் நபராகும்.