
ஜம்மு காஷ்மீரில் புனித ரம்ஜான் மாதத்தில் நடந்த ஒரு பேஷன் ஷோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரபல டிசைனர் பிராண்டான ‘ஷிவன் & நரேஷ்’ (Shivan & Naresh) நிறுவனம், தங்கள் 15-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், கடந்த மார்ச் 7ஆம் தேதி குல்மார்க் (Gulmarg) பகுதியில் ஒரு பேஷன் ஷோ ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்ச்சி பனிபொழியும் மலையின் நடுவே, பல பெண்கள் அரைகுறை ஆடைகளில் ramp walk செய்தனர், இது இஸ்லாமிய நம்பிக்கைகளை பின்பற்றும் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை உருவாக்கியது.
காஷ்மீரின் தலைமை மதகுரு மிர்வாய்ஸ் உமர் பாரூக் (Mirwaiz Umar Farooq) இந்த நிகழ்ச்சியை கடுமையாக விமர்சித்து, இது இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் மத உணர்வுகளை அவமதிக்கும் செயல் என்று கூறினார். இதேபோல், பொதுமக்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பலரும் சமூக ஊடகங்களில் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த விவகாரம் சட்டமன்றத்திலும் முக்கியமான விவாதமாக மாறியது.
ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா (Omar Abdullah) சட்டமன்றத்தில் பேசுகையில், இந்த பேஷன் ஷோ தனியார் நிறுவனத்தின் நிகழ்ச்சி என்றும், இதில் அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தார். ஆனால், இந்த நிகழ்ச்சி காஷ்மீர் மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியிருக்கலாம் என்பதால், இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடைபெறுவதாகவும், சட்ட விதிகள் மீறப்பட்டிருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இந்த விவகாரம் அரசியலிலும் பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது, மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி (Mehbooba Mufti) இந்த பேஷன் ஷோவுக்கு எதிராகக் குரல் எழுப்பி, “காஷ்மீர் மக்களின் மதம் மற்றும் கலாச்சாரத்தை மதிக்காத செயல்” என்று விமர்சித்தார். இதைத் தொடர்ந்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சிவன் பாட்டியா (Shivan Bhatia) மற்றும் நரேஷ் குக்ரேஜா (Naresh Gugreja) பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளனர்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், பேஷன் ஷோ நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ X (முன்னாள் Twitter) கணக்கில் மன்னிப்பு கோரும் அறிக்கை வெளியிட்டது. “எங்கள் நோக்கம் படைப்பாற்றல் மற்றும் வாழ்க்கை முறையைக் கொண்டாடுவதே, யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்துவதே அல்ல. எங்களின் நிகழ்ச்சி யாரையும் காயப்படுத்தியிருந்தால், இதற்காக மன்னிக்கும்படி வேண்டுகிறோம். எதிர்காலத்தில் அதிக கவனத்துடன் நிகழ்ச்சிகளை நடத்த உறுதியளிக்கிறோம்” என பதிவிட்டுள்ளனர்.