கேரளா மாநிலம் கோட்டையம் காந்திநகர் பகுதியில் அரசு நர்சிங் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவர்களை 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் கொடூரமாக சித்திரவதை செய்துள்ளனர். அதாவது இவர்கள் முதலாம் ஆண்டு படிக்கும் 3 மாணவர்களை கொடூரமான முறையில் ராகிங் செய்துள்ளனர். அதாவது சீனியர் மாணவர்கள், ஜூனியர் மாணவர்களை நிர்வாணமாக நிற்க வைத்து அவர்களது பிறப்புறுப்பில் டம்பில்ஸை  தொங்கவிட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர்.

அதோடு ஜாமென்ட்ரி பாக்ஸில் உள்ள காம்பஸ் போன்ற கூர்மையான பொருள்களைக் கொண்டு அவர்களை தாக்கியுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு ஏற்பட்ட காயத்தில் சில கிரீம்களை தடவியுள்ளனர். இதனால் அவர்கள் கதறிய போது அவர்களது வாயிலும் கிரீமை வைத்து அடைத்துள்ளனர். இதனை வீடியோவாக எடுத்தது மட்டுமின்றி, வேறு யாரிடமும் கூறினால் இந்த வீடியோவை பரப்பி விடுவோம் என்று மிரட்டி உள்ளனர். மேலும் அவர்களின் எதிர்காலத்தையே பாழாக்கி விடுவோம் என்றும் கூறியுள்ளனர்.

இது மட்டுமின்றி சீனியர் மாணவர்கள், ஜூனியர் மாணவர்களை மது குடிக்க வைத்து தொந்தரவு செய்துள்ளனர். இதில் இந்த கொடுமையை தாங்க முடியாத மாணவர் ஒருவர் தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். அதன்படி அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பிறகு இந்த கொடூர விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து காவல்துறையினர் அந்த 5 மாணவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு அவர்களை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.