
இந்திய தலைநகர் டெல்லியில் ஜந்தர் மந்திரியில் திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் யுஜிசி திருத்த விதிகளை கண்டித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, திமுக மாநிலங்களவை தலைவர் திருச்சி சிவா, மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி எழிலரசன், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது,”ஒவ்வொரு மாநிலங்களுக்கு என இந்தியாவில் தனித்தனி அடையாளங்கள் உள்ளன.வரலாறு, கலாச்சாரம், மொழி, பண்பாடு என அனைத்திலும் தனித்தன்மை பெற்றுள்ளனர். எனவே மற்ற மாநிலங்களின் கலாச்சாரத்தை நாம் மதிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியும், இந்திய கூட்டணியும் மற்ற மாநிலங்களின் கலாச்சாரங்களை மதிக்கிறது. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களின் கலாச்சாரங்களை அழிப்பது தான் ஆர்.எஸ்.எஸ் திட்டத்தின் ஒரே நோக்கம். இதனைத் தொடர்ந்து கூறி வருகிறேன்.
பாஜக அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறது. யு.ஜி.சி திருத்த விதி என்பது ஒவ்வொரு மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்ற அறிவிப்பு ஒவ்வொரு மாநிலங்களின் மீதான அடுத்தடுத்த தாக்குதல் ஆகும். 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கலாச்சாரத்தைக் கொண்டவர்கள் தமிழக மக்கள். தமிழகம் மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களின் கல்வி நிலையங்களையும் ஆர்.எஸ்.எஸ் மயமாக பாஜக முயற்சித்து வருகிறார்கள். நாங்கள் ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின் படி, கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவோம்”. என ராகுல் காந்தி தெரிவித்தார்.