
மும்பையை சேர்ந்த ஓய்வு பெற்ற 67 வயதுடைய ஆசிரியர் ஒருவருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி செல்போனில் வீடியோ அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த அழைப்பை ஆசிரியை ஏற்று பேசியுள்ளார். அப்போது எதிர் முனையில் போலீஸ் சீருடையில் காட்சியளித்த 2 பேர் தங்களை மும்பை சைபர் பிரிவு காவல் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டனர். பின்னர் அவர்கள் ஆசிரியரிடம் உங்கள் வங்கி கணக்கிலிருந்து சட்டவிரோதமாக அதிக அளவில் பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே உங்களை டிஜிட்டல் கைது செய்யப் போகிறோம் என்று மிரட்டி உள்ளனர்.
அது மட்டுமல்லாது இந்த வழக்கிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் பணத்தை உடனடியாக தங்களுக்கு அனுப்புமாறு கட்டாயப்படுத்தியும் உள்ளனர். இதனால் செய்வதறியாது திகைத்த ஆசிரியர் தனது நிரந்தர வைப்பு தொகையில் இருந்த ரூபாய் 5 கோடியே 26 லட்சம் மற்றும் கிரெடிட் கார்டில் இருந்து ரூபாய் 21 லட்சத்தை எடுத்து அவர்கள் தெரிவித்த வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆசிரியர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதில் டிஜிட்டல் கைது என்ற பெயரில் ஆசிரியை மிரட்டி பணம் பறித்த மும்பையை சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.