
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் பால்கர் மாவட்டம் வசாய் கிழக்கு நைபாடா பகுதியில் வசித்து வரும் சிறுவன் ராகவ் குமார் ஷர்மா (6). சிறுவன் வீட்டின் முன் பகுதியில் உள்ள மைதானத்தில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த மைதானத்தில் இருந்து சற்று தொலைவில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது காரின் ஓட்டுனர் காரை இயக்கிய போது கார் திடீரென முன் நோக்கி பாய்ந்து சிறுவனின் மேல் காரின் முன்பக்கம் ஏறி உள்ளது. இந்த விபத்தில் காரின் பின்பக்க சக்கரங்கள் வழியே இடிபாடுகளில் சிக்கி சிறுவன் காரின் பின்புறம் வழியாக வேகமாக சென்று விழுந்துள்ளார்.
இதனை அடுத்து கார் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இதை, கவனித்த மற்ற சிறுவர்கள் சிறுவனை காப்பாற்ற ஓடிவந்துள்ளனர். அதற்குள் சிறுவன் வேகமாக எழுந்து வீட்டை நோக்கி ஓடி உள்ளார். இதுகுறித்து சிறுவனின் நண்பர்கள் அவரது பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சடைந்த பெற்றோர்கள் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். கார் மோதியதில் விபத்துக்குள்ளாகிய சிறுவன் நூலிலையில் உயிர் தப்பி உள்ளார். ஆனால் மருத்துவமனையில் மருத்துவர்கள் விபத்தில் சிக்கியதால் அதிகமான இடங்களில் சிறுவனுக்கு உள் காயங்கள் ஏற்பட்டுள்ளன என கூறியுள்ளனர்.
இதனை அடுத்து பெற்றோர்கள் காவல் துறையில் கார் ஓட்டுநர் மீது புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனின் மீது காரை மோதியதும் இல்லாமல், கண்டும் காணாதது போல் சென்ற கார் ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.