உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஷாஜகான்பூர் மாவட்டத்தில் மயங்க் சாந்தல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நொய்டாவில் தனது காதலியுடன் லிவிங் முறையில் வாழ்ந்து வந்தார். இருவரும் சிறுவயதில் இருந்தே ஒன்றாக படித்தனர். இந்த நிலையில் சாந்தலின் காதலிக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆனால் சாந்தலுக்கு வேலை கிடைக்கவில்லை. இதனை அவரது காதலி அடிக்கடி சொல்லி காண்பித்து திட்டியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சாந்தல் நேற்று முன்தினம் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

வேலை முடிந்து வீட்டிற்கு வந்த காதலி தனது காதலன் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாந்தலின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சாந்தல் எழுதிய ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் வேலை கிடைக்காமல் நாள் முழுவதும் வீட்டில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு நேரத்தை கழிப்பதாக காதலி தன்னை திட்டியது மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறியுள்ளார். மேலும் இந்த முடிவுக்கு யாரும் காரணம் இல்லை எனவும் சாந்தல் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.