ஆந்திர பிரதேச மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள பகுதியில் ஆஞ்சநேய பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் குவைத்தில் வேலை பார்த்து வரும் நிலையில், இவரது 12 வயது மகள் ஒபுலவாரிப்பள்ளி  கிராமத்தில் உள்ள இவரது மனைவியின் சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த சகோதரியின் 59 வயதான மாமனார் ஆஞ்சநேயலு, அந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி அவரது தந்தையிடம் செல்போனில் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஆஞ்சநேய பிரசாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர் இந்தியாவுக்கு வந்துள்ளார். அதன்படி கடந்த சனிக்கிழமை அன்று தூங்கிக் கொண்டிருந்த ஆஞ்சநேயலுவை கொன்றுவிட்டு குவைத் திரும்பினார். அதன் பின் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தனது மகளின் புகார் மீது காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் தான் கொலை செய்ததாக கூறியிருக்கிறார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்வதற்கு ஆவன செய்து வருகின்றனர்.