
இன்றும் நாளையும் சவுதி அரேபியாவில் இருக்கும் ஜட்டா நகரில் ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் நடைபெற உள்ளது. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு ஏலம் தொடங்குகிறது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா செயலியிலும் அதனை பார்க்கலாம். 1574 வீரர்கள் ஏலத்திற்காக தங்களது பெயரை பதிவு செய்தனர். அதில் 574 பேர் கொண்ட இறுதிப்பட்டியல் தயார் செய்யப்பட்டது.
அதில் இந்திய வீரர்கள் 366 பேர். வெளிநாட்டு வீரர்கள் 208 பேர். ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட 81 வீரர்கள் அடிப்படை தொகையாக 2 கோடி ரூபாயை நிர்ணயம் செய்துள்ளனர். அதிகபட்சமாக பஞ்சாப் அணி 110 கோடி 50 லட்சம் ரூபாய் பணத்தை இருப்பு வைத்துள்ளது. சென்னை அணி 55 கோடி, பெங்களூர் அணி 83 கோடி, மும்பை அணி 45 கோடி, ராஜஸ்தானி 41 கோடி இருப்பு வைத்துள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் மெகா ஏலம் தொடங்கிய நிலையில் முதல்முறையாக அர்ஷ்தீப் சிங்கை 18 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கிய நிலையில் அடுத்ததாக ஸ்ரேயஸ் ஐயரை 26.75 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியது. கடந்த சீசனில் ஸ்ரேயஸ் ஐயர் கொல்கத்தா அணி கேப்டனாக இருந்த நிலையில் கோப்பையை வென்றது. இதைத்தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் ஏலத்தில் வந்தார்.
அவரை எடுக்க அணிகள் போட்டி போட்ட நிலையில் டெல்லி அணி RTM பயன்படுத்த முயற்சித்தது. ஆனாலும் அதிக தொகைக்கு ஏலம் போனதால் கட்டுபடியாகாததால் கைவிட்டு விட்டது. இதன் காரணமாக லக்னோ அணி ரிஷப் சுமார் 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியது. மேலும் இதன் மூலம் அதிக தொகைக்கு ஏலத்தில் விலை போன வீரர் என்ற பெருமையை ரிஷப் பெற்றுள்ளார்.