இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு அதிகமாக உள்ளது. செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால் மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும் என பலரும் பேசுகின்றனர். இது மட்டும் இல்லாமல் மூளை புற்றுநோய் அபாயமும் இருக்கிறது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு மற்றும் இதர சர்வதேச சுகாதார அமைப்புகள் செல்போன் பயன்பாட்டுக்கும் உடல் உபாதைகளுக்கும் சம்பந்தம் இருப்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை என கூறியது.

ஆனாலும் அது பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் பத்து நாடுகளைச் சேர்ந்த 11 ஆய்வாளர்கள் அந்த ஆய்வில் கலந்து கொண்டனர். மேலும் ஆஸ்திரேலியா அரசின் கதிரியக்க பாதுகாப்பு குழுவும் ஆய்வில் கலந்து கொண்டது. கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை 63 ஆய்வுகள் முடிவுகளும் கருத்தில் கொள்ளப்பட்டது. செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு அதன் பாதிப்புகள் குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டது.

அந்த ஆய்வு முடிவில் கூறியிருப்பதாவது, செல்போன் பயன்படுத்துவதற்கும் மூளை புற்று நோய் வருவதற்கு சம்பந்தம் இல்லை. நீண்ட நேரம் செல்போன் பேசுபவர்களுக்கும் 10 ஆண்டுகளுக்கு மேலாக செல்போன் பயன்படுத்தி வருபவர்களுக்கும் கூட இது பொருந்தும். செல்போன் உபயோகப்படுத்துவது அதிகரித்தாலும் அதற்கு ஏற்றார் போல மூளை புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்கவில்லை. அதன் மூலம் இரண்டுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை அறியலாம்.