
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியினை தொடங்கியுள்ளார். இவர் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடம் நிலையில் தன்னுடைய கட்சியின் முதல் மாநாடை மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார். அதற்காக கட்சியின் நிர்வாகிகளுடன் தலைமைச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சேலத்தில் நேரில் சென்று புஸ்ஸி ஆனந்த் 3 இடங்களை பார்வையிட்டார். இதன் மூலம் சேலத்தில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா சேலத்தில் மாநாடு நடத்திய நிலையில் மாபெரும் அளவில் வெற்றி பெற்றார். இதே போன்று மறைந்த தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் சேலத்தில் பிரம்மாண்ட மாநாடு நடத்திய நிலையில் எதிர்க்கட்சித் தலைவராக அந்தஸ்து பெற்றார். இந்த முறை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி முதலில் தமிழகத்தில் சேலத்தில் பிரச்சாரம் நடத்திய நிலையில் அவரும் மூன்றாவது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் இப்படி பல அரசியல் கட்சி தலைவர்களுக்கு பிரம்மாண்ட வெற்றியை பெற்று கொடுத்த சேலம் தமிழக வெற்றி கழகத்திற்கும் வெற்றியை பெற்றுக் கொடுக்குமா சேலம் சென்டிமென்ட் நடிகர் விஜய்க்கும் கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.