
அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் ரயில் நிலையத்திலிருந்து கொல்கத்தா நோக்கி சென்ற கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 8 மணி அளவில் விபத்துக்குள்ளானது. இந்த ரயில் மீது பின்னால் வந்த சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 25க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் சரக்கு ரயில் சிக்னலில் நிற்காமல் வந்ததுதான் இந்த கோர விபத்திற்கு காரணம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. பலத்த காயமடைந்தோருக்கு 2.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு 50,000 நிவாரணமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.