டெல்லி மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் மாநில முன்னாள் துணை முதல் மந்திரியான மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியிலுள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு அவர் நேரில் ஆஜராகினார். அவரிடம் சுமார் 8 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற விசாரணை முடிவில், சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவரை இன்று வரை சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி அவரது காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டில் சிசோடியா ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் நீதிமன்றத்தில் கூறியதாவது, என்னை சிபிஐ அதிகாரிகள் விசாரணை எனும் பெயரில் 9 -10 மணிநேரம் வரை அமரவைத்து, ஒரே கேள்விகளை திரும்ப திரும்ப கேட்டனர். அது எனக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தும் அடிப்படையில் இருந்தது என தெரிவித்தார். இந்த வழக்கில் அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று சிசோடியாவின் சிபிஐ காவல் வரும் 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.