மும்பையில் உள்ள ஒரு குழந்தைகள் நல மையத்தில் படித்து வரும் முகமது டேனிஷ் (15) என்ற சிறுவன் 15 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் விளையாடும் தேசிய கால்பந்து போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் கால்பந்து குழுமம் சிறுவன் பற்றிய முழு விவரத்தை குழந்தைகள் நல மையத்தில் கேட்டபோது சிறுவனைப் பற்றிய முழு விவரம் தெரியவில்லை. இதனால் சிறுவனின் கைரேகை பதிவை வைத்து ஆதார் களத்தில் தேடிய போது சிறுவன் தெலுங்கானா மாநிலம் நாராயண பேட்டா பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

இந்த சிறுவன் முகமது மொயிஸ் மற்றும் ஷபானா தம்பதியின் மகன். இந்நிலையில் சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலும் சிறுவன் கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி ஹைதராபாத் ரயில் நிலையத்திலிருந்து மும்பை ரயில்வே நிலையத்திற்கு வந்துள்ளார். இந்த சிறுவன் யார் என்று தெரியாத காரணத்தினால் குழந்தைகள் நல வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்‌ என்பது குறிப்பிடத்தக்கதாகும்.