ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் முதல்வர் கருணாநிதி தமிழ் மொழிக்கு ஆற்றிய பங்களிப்புகள் குறித்து இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வரும் கல்வியாண்டிற்கான ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாட நூலில் ஏழாம் பக்கத்தில் செம்மொழியான தமிழ் மொழியாம் என்ற தலைப்பில் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய பணிகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளது. கருணாநிதியின் நாவும் பேனாவும் தமிழுக்கு ஆயுதங்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்தி இனிய கொடுமுடி முதல் குமரி தாய்மடி வரை செம்மொழியான தமிழ் மொழியாம் என செம்மாந்து ஒலிக்க செய்தவர் கருணாநிதி என்று அந்த பாடப்பகுதி புத்தகத்தில் இடம் பெற்றது. கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய பணிகள் குறித்த தகவல்கள் ஒன்பதாம் வகுப்பு பாட புத்தகத்தில் இடம் பெறும் என்று சட்டப்பேரவையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.