ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மாவட்டத்தின் கலந்தர் கிராமத்தில் நடந்த ஒரு திருமணம் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அதாவது 95 வயதுடைய ராமா பாய் அங்காரி மற்றும் 90 வயதுடைய ஜிவாலி தேவி என்ற தம்பதியர், 70 ஆண்டுகள் லிவ்-இன் உறவில் வாழ்ந்த பிறகு, குழந்தைகளின் ஏற்பாட்டில் மிகுந்த ஆடம்பரத்துடன் திருமணம் செய்து கொண்டனர். பல ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்த இவர்களுக்கு 6 குழந்தைகள் இருந்தனர். அவர்களில் நான்கு பேர் அரசுத் துறையில் பணியாற்றுகின்றனர்.

இந்த தனித்துவமான திருமண நிகழ்ச்சி கடந்த புதன்கிழமை, கிராமத்தில் DJ இசையுடன் விருந்துடன் நடைபெற்றது. கிராம மக்கள் அனைவரும் கலந்துக்கொண்டு மகிழ்ச்சியாக நடனமாடினர். ராமா பாய் மற்றும் ஜிவாலி தேவியின் வயதைப் பார்த்தும், வாழ்வின் முடிவில் சட்டப்படி திருமண உறவு கொள்ளும் முடிவைப் பார்த்தும், பலரும் பெருமிதம் அடைந்தனர். “எப்போது இறப்போம் எனத் தெரியாது. அதற்கு முன்பாக எங்கள் திருமணத்தை நடத்துங்கள்” என்று தங்கள் குழந்தைகளிடம் இருவரும் விருப்பம் தெரிவிததுள்ளனர்.

அந்த விருப்பத்தை மதித்துக் குழந்தைகள் முழுமையாக திருமண ஏற்பாட்டில் ஈடுபட்டு, உண்மையான குடும்ப நெகிழ்ச்சியான நிகழ்வாக அதை மாற்றினர். ராமா பாயின் மகன்கள் பாகு (60), ஷிவ்ராம் (55), காந்திலால் (52), லட்சுமணன் (42) மற்றும் மகள்கள் சுனிதா, அனிதா ஆகியோர் இணைந்து இந்த திருமணத்தை சிறப்பாக நடத்தியுள்ளனர்.

இவர்களில் இருவர் அரசு ஆசிரியர்கள், ஒரு பெண் செவிலியராக பணியாற்றி வருகிறார். திருமணத்திற்குப் பின் கிராம மக்களுக்கு விருந்தும் வழங்கப்பட்டது.  மேலும் இத்தகைய உணர்வூட்டும் நிகழ்வு, தற்போது மாவட்டத்தில் பேசப்படும் முக்கிய செய்தியாக மாறியுள்ளது. அந்த தம்பதிகளுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.