கரூரில் நடைபெற்ற தவெக கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கும் அரசு வேலை வாங்கித் தருவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அவர்கள் உத்தரவாதம் அளித்துள்ளதாகக் கூறப்படும் தகவல், தற்பொழுது அரசியல் மற்றும் சமூக வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இதற்குப் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வரும் வேளையில், போட்டித் தேர்வுகளுக்குப் படித்து வரும் இளைஞர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், “எனக்கு அந்த 41 குடும்பங்கள் மீது எந்தக் கோபமும் இல்லை; ஆனால் அவங்களைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது” என்று அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் அந்த இளைஞர் பேசுகையில், “ஒரு நடிகரின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்குப் போய் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை கொடுக்க வேண்டுமா? இதற்காக நாங்கள் எத்தனை வருடங்களாக உழைப்பைக் கொட்டிப் படித்துக் கொண்டிருக்கிறோம், எங்களுடைய பொன்னான நேரத்தைச் செலவழித்து, ஆயிரக்கணக்கில் பணம் கட்டி கோச்சிங் சென்டர்களுக்குச் சென்று கொண்டிருக்கிறோம்.
எங்களின் அத்தனை உழைப்பும் வீணாவதைத் தாண்டி, எங்களுக்குக் கிடைக்காத ஒரு அரசு வேலைக்கான அங்கீகாரம், இதில் எதையுமே செய்யாத ஒரு குடும்பத்திற்குக் கிடைக்கிறது.
அதுவும் நீங்கள் இன்னும் முதலமைச்சர் கூட ஆகவில்லை, வெறும் ஒரு நடிகராக, கட்சித் தலைவராக இருக்கும்போதே இந்த உத்தரவாதம் கொடுக்கப்படுகிறது என்றால், இரவும் பகலும் படித்துக் கொண்டிருக்கும் எங்களைப் போன்ற இளைஞர்களுக்குப் பொறாமையாகத்தான் இருக்கும்” என்று மிக ஆவேசமாகக் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
இந்த வீடியோ தற்பொழுது அரசு வேலைக்காகப் படித்து வரும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் மனக் குரலாக மாறி, இணையத்தில் மிகப்பெரிய விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது.
