மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற துர்கா கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட பிரபல ஆன்மீக பேச்சாளர் தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி, இந்துக்கள் நான்கு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என விடுத்த வேண்டுகோள் நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மதம் மற்றும் கலாச்சாரத்தின் பெருமை உலகளவில் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், சனாதன தர்மத்தைப் பாதுகாக்கவும், தேசப் பணியில் ஈடுபடவும் ஒவ்வொரு இந்து குடும்பத்திலும் நான்கு குழந்தைகள் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அதோடு நிறுத்திக்கொள்ளாமல், அந்த நான்கு குழந்தைகளில் ஒருவரை ஆர்எஸ்எஸ் (RSS) தொண்டராக மாற்றி நாட்டுச் சேவைக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்றும் அவர் அதிரடியாகக் கூறியுள்ளார்.

தேசத்தில் எந்தவொரு பேரிடர் ஏற்பட்டாலும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பாகுபாடின்றி சேவை செய்வதாகப் பாராட்டிய அவர், சத்ரபதி சிவாஜி மகாராஜ் மற்றும் சுவாமி ராமதாஸின் வரலாற்றை மேற்கோள் காட்டி கடமை மற்றும் ஆன்மீக சக்தியின் முக்கியத்துவத்தை விளக்கினார். “பாரத் மாதா கி ஜெய்” என்ற முழக்கம் பெருமையுடன் ஒலிக்கப்படும் ஒரே நாடு இந்தியா தான் என்றும், அன்னை துர்காவின் ஆசியுடன் நாடு தெய்வீகப் பாதையில் முன்னேறி வருவதாகவும் அவர் பேசினார்.

“>

மக்கள் தொகைக் கட்டுப்பாடு குறித்த விவாதங்கள் ஒருபுறம் இருக்க, ஆன்மீக மேடையில் அவர் முன்வைத்த இந்த ‘நான்கு குழந்தை’ ஃபார்முலா தற்போது சமூக வலைதளங்களில் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கடும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.