கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இருதுகோட்டை கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளராக இருக்கிறார். இவருக்கு தமிழரசி(19), தமிழ் பிரியா(17) என்ற 2 மகள்கள் இருந்துள்ளனர். தமிழரசி தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி கார்டியாட்டிக் இரண்டாம் ஆண்டும், தமிழ் பிரியா தனியார் கல்லூரியில் பிசியோதெரபியும் படித்து வந்துள்ளார்.

நேற்று மதியம் தமிழரசியும், தமிழ் பிரியாவும் அதே ஊரில் வசிக்கும் உறவினரான 10 வயது சிறுவன் அம்பேத்வளவனுடன் மொபட்டில் தேன்கனிக்கோட்டைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் சாப்பராணப்பள்ளி அருகே வளைவில் திரும்ப முயன்ற போது கோழி பண்ணைக்கு தீவனம் ஏற்றி வந்த லாரி மொபட் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த தமிழரசி, தமிழ் பிரியா, சிறுவன் ஆகிய மூன்று பேரும் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரின் உடல்களையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை அறிந்த ஏராளமான கட்சி நிர்வாகிகள், உறவினர்கள் அரசு மருத்துவமனையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி தலைமையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.