நீலகிரி உதகையில் தி.மு.க-வின் உறுப்பினர் சேர்க்கை ஏடிசி பஸ் நிலையம் அருகில் நடந்தது. இதில் திமுகவின் கழகப் பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் ஆகிய 3 அமைச்சர்களும் பங்கேற்றனர். அப்போது திடீரென்று கரண்ட் கட் ஆனது.

கரண்ட் வராததால் கட்சி நிர்வாகிகளிடையே நீர்வளத் துறை அமைச்சர் மின் வாரியம் அலுவலகத்திடம் கேட்க சொன்னார். அதன்பின் கட்சிகாரரிடம் இருந்து செல்போனை வாங்கிய அமைச்சர் துரைமுருகன் உதகை நகர மின்வாரிய கூடுதல் பொறியாளரை தொடர்புக்கொண்டு 3 அமைச்சர்கள் பங்கேற்று இருக்கும் நிகழ்ச்சியில் திடீரென எப்படி கரண்ட் கட் ஆகும் என சராமாரியாக கேள்வி கேட்டார். மேலும் இதுகுறித்து நேரில் வந்து விளக்கமளிக்குமாறு தெரிவித்தார். அதன்பின் சிறிது நேரத்தில் கரண்ட் வந்ததை அடுத்து நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.