ஒமன் நாட்டு கடல் பகுதியில், ஹார்முஸ் ஜலசந்தி அருகே சென்ற ‘எம்டி செடெபெல்லோ’ (MT Settebello) என்ற வணிகக் கப்பல் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர். ஈரானிய துறைமுகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த முற்றுகையை இந்தக் கப்பல் மீறியதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தெரிவித்தது. இச்சம்பவத்தால் இந்தியாவில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பிரான்சில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டின் இடையே பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் 16 மாதங்களுக்குப் பிறகு இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, கடல்சார் மாலுமிகளின் பாதுகாப்பிற்கு இந்திய அரசு வழங்கும் உச்சக்கட்ட முன்னுரிமையை டிரம்ப்பிடம் சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, அமெரிக்கா – ஈரான் இடையே வரவிருக்கும் அமைதி ஒப்பந்தத்தில் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பிற்கான சிறப்பு விதிகள் சேர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இச்சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய மாலுமிகளின் மரணத்திற்கு எந்தவொரு இரங்கலோ அல்லது வருத்தமோ தெரிவிக்கவில்லை. வணிகக் கப்பல்களை இயக்குவது ஒரு ‘கடினமான வேலை’ என்று குறிப்பிட்ட அவர், “நான் இதைப் பற்றிக் கேள்விப்பட்டேன், இது எப்போதும் நடப்பதுதான், ஆனால் நாம் ஒன்றிணைந்து செயல்படுகிறோம்; இந்திய மக்கள் மீது எங்களுக்கு அன்பிருக்கிறது” என்று மழுப்பலாகப் பதிலளித்தார்.
அதே நேரத்தில், கடந்த ஓராண்டாக நீடித்த பதற்றமான உறவைச் சீரமைக்க இரு தலைவர்களும் உறுதியளித்ததாகவும், இந்தியா மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்கா துணை நிற்கும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். இச்சம்பவம் தொடர்பாக, அமெரிக்கத் தூதரக அதிகாரி ஜேசன் மீக்ஸை இந்தியா மூன்று நாட்களில் இருமுறை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்ததுடன், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவிடம் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
