திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வளையபாளையத்தில் அர்ஜுனன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கருப்புசாமி மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கருப்புசாமி அதே பகுதியில் வசிக்கும் உறவினரான ராமர் என்பவருடன் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா செல்ல முடிவெடுத்தனர். அவர்கள் உறவினர்கள் சிலருடன் மொத்தம் 3 மோட்டார் சைக்கிள்களில் நேற்று அதிகாலை ஒகேனக்கல் சென்றனர். அங்கு அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் மேட்டூர்- பவானி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அம்மாபேட்டை சின்ன பாளையம் அருகே சென்றபோது ஈரோடு நோக்கி சென்ற தனியார் பேருந்து டிரைவர் சடன் பிரேக் பிடித்தார். இதனால் கருப்புசாமி மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றார். அப்போது கோவை நோக்கி வேகமாக சென்ற கண்டெய்னர் லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கருப்புசாமியும், ராமரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் லாரி டிரைவரான வெங்கடேசன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.