நாகப்பட்டினம் மாவட்டம் சுனாமி குடியிருப்பில் விஜயகுமார்(45) வசித்து வருகிறார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை செய்கிறார். இவருக்கு பாண்டி மீனா(40) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு விஜயகுமார் மற்றும் பாண்டி மீனா தம்பதியினர் குழந்தைகளுடன் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அதிகாலை நேரம் வீட்டில் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் இவரது மகன் (2) யாசின் ராம்

மேற்கூரை விழுந்ததில் இடுபாடுகளில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். அதுமட்டுமில்லாமல் வீட்டின் மேற்கூரையின் மீது பொருத்தப்பட்டிருந்த மின்விசிறி பாண்டி மீனாவின் கையில் விழுந்து பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து வந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் மற்றும் பாண்டி மீனாவையும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.