ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில், திருமண விவகாரம் தொடர்பான முன்விரோதம் காரணமாக 21 வயது இளைஞர் ஒருவரைக் கடத்தி, செருப்பு மாலை அணிவித்து, சிறுநீர் குடிக்க வைத்துக் கொடூரமாகத் தாக்கிய மனிதநேயமற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஒரு பெண் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அஜ்மீர் மாவட்டம் கக்வானா கிராமத்தைச் சேர்ந்த ஜீது (21) என்ற இளைஞர், ஒப்பந்ததாரர் ஒருவரிடம் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சனிக்கிழமை காலை 9 மணியளவில் அவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, 20 முதல் 25 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்துக் கொடூரமாகத் தாக்கியுள்ளது. பின்னர் அவரை வலுக்கட்டாயமாக ஒரு வாகனத்தில் ஏற்றி, பீர் கிராமத்திற்கு கடத்திச் சென்று சிறை வைத்துள்ளனர்.

சிறை வைக்கப்பட்ட ஜீதுவுக்கு அக்கும்பல் கடுமையான சித்திரவதைகளை அளித்துள்ளது. அவருக்குச் செருப்பு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு முன்னிலையில் அவமானப்படுத்தியதோடு, வலுக்கட்டாயமாகச் சிறுநீரைக் குடிக்க வைத்துள்ளனர். இந்த கொடூரமான தாக்குதல் சம்பவத்தை அக்கும்பல் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.

போலீஸ் விசாரணையில் இந்த கொடூரத்திற்குப் பின்னணியில் உள்ள திருமணப் பகை வெளிவந்துள்ளது. பீர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகியுள்ளது. அதன் பிறகு அவர் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, அந்தப் பெண்ணை ஜீது இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளார்.

இதற்கு அந்தப் பெண்ணின் முன்னாள் கணவர் குடும்பத்தினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்களது சமூக வழக்கப்படி இந்தத் திருமணம் நடக்கவில்லை எனக் கூறி, ஜீது மீது ஆத்திரத்தில் இருந்த அவர்கள் இக்கொடூரச் செயலை அரங்கேற்றியுள்ளது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்துத் தெரிந்ததும் பாதிக்கப்பட்ட ஜீதுவின் உறவினர்கள்  காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இதனைத் தொடர்ந்து போலீசார் விரைந்து செயல்பட்டு, கடத்தப்பட்ட ஜீதுவை மீட்டனர்.

இதுகுறித்து அஜ்மீர் எஸ்பி ஹர்ஷ்வர்தன் அகர்வாலா கூறுகையில், “இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாக இருந்த ஒரு பெண் உட்பட 9 பேரை உடனடியாகக் கைது செய்துள்ளோம். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வைரல் வீடியோவின் அடிப்படையில், தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளையும் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.