தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன் மாநிலம் தழுவிய தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். இதுவரை தமிழகத்தின் 181 தொகுதிகளில் தனது சூறாவளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ள அவர், சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் களமிறங்குகிறார். வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சத்தியமங்கலத்தில் தனது அடுத்தகட்ட பரப்புரையைத் தொடங்க உள்ளதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது குறித்து எடப்பாடியார் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக ஆட்சிக்கால சாதனைகளையும், தற்போதைய திமுக அரசின் குறைபாடுகளையும் மக்களிடம் நேரடியாகக் கொண்டு செல்வதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே கொங்கு மண்டலம் அதிமுக-வின் கோட்டையாகக் கருதப்படும் நிலையில், எடப்பாடியாரின் இந்த வருகை அந்தப் பகுதியில் அரசியல் சூட்டை மேலும் அதிகரித்துள்ளது. 234 தொகுதிகளையும் விரைவில் கவர் செய்யும் நோக்கில் இபிஎஸ் காட்டி வரும் இந்தத் வேகம், அதிமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
