நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா வெறும் 14 பந்துகளில் அரைசதம் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். கௌஹாத்தியில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 154 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரராகக் களம் இறங்கிய அவர், நியூசிலாந்து பந்து வீச்சாளர்களைத் திணறடித்தார்.

இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். முன்னதாக கடந்த 2007 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக யுவராஜ் சிங் 12 பந்துகளில் அடித்த அரைசதமே இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. நேபாள வீரர் திபேந்திர சிங் ஐரி 9 பந்துகளில் அரைசதம் அடித்ததே உலக சாதனையாக நீடிக்கிறது.

அபிஷேக்கின் இந்த அதிரடி ஆட்டத்தைக் கண்டு அவரது குருவான யுவராஜ் சிங் சமூக வலைதளத்தில் நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளார். அதில், “இன்னும் உன்னால் 12 பந்துகளில் அரைசதம் அடிக்க முடியவில்லையா? மிகச் சிறப்பாக விளையாடினாய், இதே வேகத்தைத் தொடரு” என்று கிண்டலாகப் பாராட்டியுள்ளார்.

இந்தப் போட்டியில் 20 பந்துகளில் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்த அபிஷேக் சர்மா, இந்திய அணி 10 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற உதவினார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.