அபார்ட்மென்ட் ஒன்றின் வரவேற்பறையில் லிஃப்ட் கதவு திறந்த நிலையில் இருக்க, அதன் பள்ளத்திற்கு அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவனைப் பாதுகாப்பு காவலர் மின்னல் வேகத்தில் செயல்பட்டுக் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், லிஃப்ட் வராத நிலையிலும் கதவு திறந்திருப்பதை அறியாத சிறுவன், அதன் பள்ளத்தை நோக்கித் தள்ளாடியபடி நடந்து செல்வதைக் காண முடிகிறது.

 

அருகிலேயே அமர்ந்திருந்த பாதுகாப்பு காவலர், நிலைமையின் தீவிரத்தை நொடிப்பொழுதில் உணர்ந்து, இருக்கையை விட்டுப் பாய்ந்து சென்று அந்தச் சிறுவனைத் தூக்கி அப்புறப்படுத்தினார். பாதுகாப்பு காவலரின் இந்தச் சமயோசித புத்தியையும் துணிச்சலையும் பாராட்டி வரும் இணையதளவாசிகள், அவரை உண்மையான ஹீரோ என்று புகழ்ந்து வருகின்றனர்.

அதேவேளையில், சிறுவர்களைக் கவனிக்கத் தவறிய பெற்றோரின் அஜாக்கிரதையையும், முறையான பாதுகாப்பு எச்சரிக்கை இன்றி மின்தூக்கியைத் திறந்தே வைத்திருந்த அடுக்குமாடி குடியிருப்பின் நிர்வாகத்தையும் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.