ஐபிஎல் 2026 தொடரின் 40-வது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் நிர்ணயித்த 223 ரன்கள் என்ற இமாலய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிக அற்புதமாகத் துரத்திப் பிடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் நாயகனாகப் பார்க்கப்படுவது 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி தான். ராஜஸ்தான் ராயல்ஸ் இன்னிங்ஸின் 2-வது ஓவரில், உலகின் அதிவேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான லோகி பெர்குசன் வீசிய 145.8 கி.மீ வேகப்பந்தை, சற்றும் தயக்கமின்றி எம்.எஸ்.தோனியின் டிரேட் மார்க் ‘ஹெலிகாப்டர் ஷாட்’ மூலம் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். இந்த ஒரு ஷாட் ஒட்டுமொத்த மைதானத்தையும் ஆச்சரியத்தில் உறைய வைத்தது.

​வெறும் 16 பந்துகளில் 43 ரன்களைக் குவித்து (3 பவுண்டரி, 5 சிக்ஸர்) ராஜஸ்தான் அணிக்கு மின்னல் வேகத் தொடக்கத்தைக் கொடுத்தார் வைபவ். இந்த அதிரடி மூலம் அவர் நடப்பு சீசனில் 400 ரன்களைக் கடந்து ‘ஆரஞ்சு கேப்’பையும் (Orange Cap) மீண்டும் தனது வசமாக்கினார். இறுதியில் டோனோவன் பெரைரா மற்றும் ஷுபம் துபே ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தான் அணி வெற்றியை உறுதி செய்தது. இந்த சீசனில் இதுவரை தோல்வியே சந்திக்காமல் இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, வைபவ் சூர்யவன்ஷியின் இந்த அதிரடி ஆட்டம் முதல் தோல்வியைப் பரிசளித்துள்ளது.