ஐபிஎல் 2026 தொடரின் 40-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. ஆனால், இந்த வெற்றியைக் காட்டிலும் அந்த அணியின் கேப்டன் ரியான் பராக் டிரெஸ்ஸிங் ரூமில் செய்த ஒரு காரியம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போட்டியில் 16 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த பராக், டிரெஸ்ஸிங் ரூமிற்குச் சென்ற சில நிமிடங்களிலேயே அங்கு அமர்ந்து ‘வேப்’ (Vape – மின்னணு சிகரெட்) பயன்படுத்தியுள்ளார். இந்த அதிர்ச்சிகரமான காட்சி நேரடி ஒளிபரப்பில் தற்செயலாகத் தெரிந்துவிட்டதால், கிரிக்கெட் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

​பராக் அருகே துருவ் ஜூரல், குல்தீப் சென் மற்றும் யுத்வீர் சிங் சரக் ஆகியோர் அமர்ந்திருந்த நிலையில், எவ்வித தயக்கமுமின்றி அவர் அந்தச் சாதனத்தைப் பயன்படுத்தியுள்ளார். ஒரு அணியின் கேப்டனாக இருந்து கொண்டு இளம் வீரர்களுக்குத் தவறான முன்னுதாரணமாக அவர் செயல்படுவது கண்டிக்கத்தக்கது எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே களத்தில் தனது ஆக்ரோஷமான செய்கைகளால் விமர்சனத்திற்கு உள்ளாகும் பராக், இப்போது இந்த விவகாரத்தில் சிக்கியிருப்பது அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது எக்ஸ் தளத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.