மின் கம்பங்களில் கட்டப்பட்டிருக்கும் கேபிள் வயர்களை 15 நாட்களுக்குள் உடனே அகற்ற வேண்டும் என்று கேபிள் ஆபரேட்டர்களுக்கு தமிழக மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து மின்வாரியம் சார்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், மின் கம்பங்களில் கேபிள் டிவியின் வயர்கள், விளம்பர பலகைகள் கட்டி வைப்பதால் மின்விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

எனவே மின்விபத்துகளை தடுக்கும் விதமாக 15 நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வழங்கி கேபிள் டிவி ஒயர்களை அகற்றுமாறு ஆபரேட்டர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மேலும் இது குறித்து அவ்வப்போது அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு மின்கம்பங்களை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இந்த அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் ஏதேனும் விபத்துக்கள் ஏற்பட்டால் கள அலுவலர்களே பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது