டெல்லியில் உள்ள ஒரு தனியார் டெலிகாம் நிறுவனத்தில், சம்பளப் பாக்கி தொடர்பாக ஊழியர் ஒருவருக்கும், நிறுவனத்தின் எச்.ஆர் (HR) அதிகாரிக்கும் இடையே நடந்த காரசாரமான வாக்குவாத வீடியோ தற்சமயம் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், தனக்கு மாதம் 13,000 ரூபாய் சம்பளம் தருவதாகக் கூறி வேலைக்கு எடுத்ததாகவும், ஆனால் ஒரு மாதத்திற்கும் மேலாகக் கடுமையாக உழைத்த பிறகு தனது வங்கிக் கணக்கில் வெறும் 3,800 ரூபாய் மட்டுமே டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக அந்த ஊழியர் குற்றம் சாட்டுகிறார்.

இதுகுறித்து விளக்கம் கேட்பதற்காக மதியம் 1 மணியில் இருந்து தான் காத்திருப்பதாகவும், ஆனால் எந்தவொரு பொறுப்பான அதிகாரியும் தன்னை வந்து சந்திக்கவில்லை என்றும் அவர் ஆக்ரோஷமாகத் தனது ஆதங்கத்தைக் கொட்டியுள்ளார். ​கோபத்தின் உச்சத்துக்கே சென்ற அந்த ஊழியர், அங்கிருந்த எச்.ஆர் அதிகாரியை நோக்கித் தனது மொபைல் கேமராவைத் திருப்ப, “என்னை வீடியோ எடுக்கக் கூடாது” என்று அந்த அதிகாரி ஆட்சேபனை தெரிவிக்கிறார். அப்போது அங்கிருந்த மற்றொரு ஊழியர் குறுக்கிட்டு, எச்.ஆருக்கு ஆதரவாகப் பேசி, அந்தப் பாதிக்கப்பட்ட ஊழியரை அமைதியாக இருக்குமாறு அறிவுறுத்துகிறார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, “அங்குள்ள மற்றவர்கள் வீடியோ எடுப்பதைக் தடுத்தார்களே தவிர, அந்த ஏழை ஊழியருக்கு ஏன் சம்பளம் குறைவாகக் கொடுக்கப்பட்டது என்ற உண்மையான அவலத்தைக் கேட்கவில்லையே!” என்று நெட்டிசன்கள் பலரும் கம்பெனிக்கு எதிராகக் கொந்தளித்து வருகின்றனர். வேலை செய்யும் இடத்தில் ஊழியர்களின் உரிமைகள் மற்றும் சம்பள வெளிப்படைத்தன்மை எவ்வளவு முக்கியம் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் விவாதப் பொருளாக்கியுள்ளது.