இந்தியா, பாகிஸ்தான் பிரிவுக்கு முன்பிருந்தே இரு நாடுகளின் உணவு மற்றும் கலாசாரத்தில் பல ஒற்றுமைகள் இருந்து வருகின்றன. அந்த வகையில் பாகிஸ்தானின் முல்தான் நகரில் தயாரிக்கப்படும் ‘டோலி ரொட்டி’ தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. சுமார் 100 ஆண்டுகள் பழமையான இந்த ரொட்டிக்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான பாரம்பரிய கதை இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக திருமண நிகழ்வுகளுடன் தொடர்புடைய இந்த ரொட்டி, அக்கால மக்களின் வாழ்க்கை முறையையும் பயண சூழலையும் பிரதிபலிக்கிறது. தற்போது இந்த பாரம்பரிய உணவு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் ‘டோலி ரொட்டி’ குறித்த தகவல்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு, திருமண ஊர்வலத்தில் மணமகளை பல்லக்கில் அழைத்துச் செல்லும்போது இந்த ரொட்டியும் உடன் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது இன்றைய காலத்தைப் போல வாகனங்கள் மூலம் விரைவாக பயணம் செய்வது சாத்தியமாக இருக்கவில்லை. திருமண ஊர்வலங்கள் பல நாள்கள் பயணம் செய்ய வேண்டிய சூழல் இருந்ததாக கூறப்படுகிறது. பலர் குதிரைகள் அல்லது குதிரை வண்டிகளில் பயணம் செய்த நிலையில், வழியில் உணவு ஏற்பாடு செய்வது சிரமமாக இருந்தது. இதனால் நீண்ட நேரம் கெடாமல் இருக்கக்கூடிய இனிப்பு ரொட்டியை பல்லக்கில் வைத்துச் சென்றுள்ளனர். பயணத்தின்போது பசி எடுக்கும்போது அதை சாப்பிட்டுக் கொள்ளும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by aqsa jutt (@aqsajutt1212)

முன்பு ‘டோலி ரொட்டி’ வெறும் இனிப்பு ரொட்டியாகவே தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. காலப்போக்கில் அதன் தயாரிப்பு முறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது கோவா உள்ளிட்ட பொருள்களும், சில வகைகளில் கீமாவும் சேர்த்து இந்த ரொட்டி தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்தானில் பல ஆண்டுகளாக இந்த பாரம்பரிய ரொட்டியை தயாரித்து வரும் கடைகளும் இருப்பதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ள விடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல தலைமுறைகளாக இந்த உணவு தயாரிப்பு முறை தொடர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் ‘டோலி ரொட்டி’ ஒரு உணவாக மட்டுமல்லாமல், முல்தானின் பழைய திருமண மற்றும் பயண கலாசாரத்தின் ஒரு பகுதியாகவும் பார்க்கப்படுகிறது.

இந்த பாரம்பரிய உணவு குறித்து அக்சா ஜாட் என்ற சமூக வலைதளப் பிரபலம் தனது வீடியோவில் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். தனது பாட்டியும் இந்த ரொட்டியை தயாரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். திருமண ஊர்வலங்களின் நீண்ட பயணத்துக்காக உருவான இந்த உணவு, காலம் மாறினாலும் தனது பாரம்பரிய அடையாளத்தை தொடர்ந்து தக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஒருகாலத்தில் பயணத்தின்போது பசியை சமாளிக்க உதவிய இந்த ரொட்டி, தற்போது சமூக வலைதளங்கள் மூலம் புதிய தலைமுறையினரிடமும் அறிமுகமாகியுள்ளது. சுமார் ஒரு நூற்றாண்டு பழமையான உணவின் பின்னணியில் இருக்கும் இந்த கதை தற்போது இணையத்தில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.