தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு நடைபெற்ற நிலையில் தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொது தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.digilocker.gov.in, www.tnresults.nic in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் மொத்தமாக 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் மாணவிகள் 95.88 சதவீதமும், மாணவர்கள் 91.74 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் வழக்கமாக மாணவர்களை விட மாணவிகள் தான் இந்த வருடமும் தேர்ச்சி அதிகமாக பெற்றுள்ளனர்.

இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவி தேஜேஸ்வினி 492 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்த மாணவி தமிழில் 98 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 97 மதிப்பெண்களும், கணக்கு பாடத்தில் 97 மதிப்பெண்களும், அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்களும், சமூக அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்களும் என மொத்தமாக 492 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். மேலும் இந்த  மாணவிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.