தாய்லாந்து நாட்டின் சய்சோம்பூன் மாகாணத்தில் உள்ள ஆழமான காட்டுப்பகுதியில், தங்கச் சுரங்கத்திற்குள் சிக்கிய ஐந்து தொழிலாளர்கள் பத்து நாட்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர். கடந்த மே 20-ஆம் தேதி தங்கம் மற்றும் மதிப்புமிக்க தாதுக்களைத் தேடி குகைக்குள் சென்ற 7 கிராமவாசிகள், பருவமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கினர். அதிர்ஷ்டவசமாக தப்பிய ஒரு தொழிலாளர் கொடுத்த தகவலின் பேரில், லாவோஸ், தாய்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளைச் சேர்ந்த நிபுணத்துவ மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

மனிதர்களால் தோண்டப்பட்ட இந்த தற்காலிகச் சுரங்கம் மிகவும் பலவீனமாகவும், சில இடங்களில் வெறும் 60 சென்டிமீட்டர் அகலம் கொண்ட குறுகிய பாதையாகவும் இருந்ததால் மீட்புப் பணி பெரும் சவாலாக அமைந்தது. அத்துடன், சேறு கலந்த காபி நிறத் தண்ணீர் மற்றும் நச்சு வாயு ஆபத்துகளுக்கு இடையே, ராட்சத பம்புகள் மூலம் நீர்மட்டம் குறைக்கப்பட்டதை அடுத்து, குகையினுள் 300 மீட்டர் தொலைவில் தஞ்சம் அடைந்திருந்த 5 தொழிலாளர்கள் பத்திரமாக வெளியேறினர். மீட்கப்பட்டவர்கள் அளித்த தகவலின்படி, குகையின் 500 மீட்டர் ஆழமான, ஆபத்தான பகுதியில் சிக்கியுள்ள மேலும் இரு தொழிலாளர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.