இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில், ஒரு ஆசிரியர் 24 மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 8ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவிகள், அந்த ஆசிரியரின் தகாத நடத்தை குறித்து பள்ளி முதல்வரிடம் புகார் அளித்தனர்.

இது குறித்து பள்ளி நிர்வாகத்தின் மூலம் கடந்த வெள்ளிக்கிழமை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பள்ளியின் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு குழுவுக்கு விவரம் அனுப்பினர். இதைத்தொடர்ந்து, சனிக்கிழமை பாலியல் துன்புறுத்தல் தடுப்பு குழுவின் தலைமையில்  மாணவியரின் பெற்றோர்களுக்கு கூட்டம் நடத்தப்பட்டது.

அந்த சந்திப்பில், பெரும்பாலான பெற்றோருக்கு தங்கள் பிள்ளைகள் இவ்வாறு துன்புறுத்தப்படுகிறார்கள் என்பது தெரிய வந்தது. புகாரின் நம்பகத்தன்மையை உறுதி செய்த போலீசார், மாணவிகள் குற்றம் சாட்டிய ஆசிரியரை கைது செய்தனர். அவர் மீது போக்சோ மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 75 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு மீறப்படுவது பெற்றோர்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாணவிகள் நேரடியாக புகார் அளித்த தைரியம், சமூகத்தில் பெண்கள் உரிமைக்கான விழிப்புணர்வை காட்டுகிறது என கல்வி ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.