முன்னாள் காவல்துறை ஆணையரும், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருமாக இருந்த அருண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சொத்துக் குவிப்பு வழக்குத் தொடர வேண்டும் என்று கோரி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அருண் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்களைச் சட்டவிரோதமாகச் சேர்த்துள்ளதாகவும், போலி என்கவுண்டர் மற்றும் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டுப் பணத்தைக் குவித்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருண் மற்றும் அவரது மனைவியும் ஐஆர்எஸ் அதிகாரியுமான யமுனாதேவி ஆகியோரின் மகள்கள் சார்வியா அருண் மற்றும் இனியா அருண் பெயரில் இயங்கும் ‘வெங்கடேச பெருமாள் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் மூலமாகப் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெறும் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு கொண்ட இந்த நிறுவனம் 65 லட்சம் ரூபாய் நஷ்டம் என்று கணக்கு காட்டியுள்ள நிலையில், இவற்றுக்குத் தனியார்கள் மூலம் கோடிக்கணக்கில் கடன் பெறப்பட்டதாக வருமான வரித்துறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்களை விடுவிக்கும் தீர்ப்பாயத்தில் நீதிபதியாகப் பணியாற்றிய யமுனா தேவி, தனது பதவியைப் பயன்படுத்தி முறைகேடான பணப்பரிமாற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் புகாரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அருண் தனது குடும்பத்தினரையும், கௌதம் உள்ளிட்ட பலரையும் பினாமிகளாக வைத்து சொத்துக்களைச் சேர்த்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சிபிஐ மற்றும் மத்திய நிதித்துறையின் தலைமைச் செயலகத்திற்கும் புகார்கள் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“>

 

கடந்த காலத்தில் தன் மீதான பல்வேறு வழக்குகளுக்குக் காரணமாக இருந்த அருண் மீதான இந்தச் சட்டவிரோதச் சொத்துக் குவிப்புப் புகார்கள் குறித்து அரசு உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.