கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஹரிணி என்ற 36 வயது பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி தாசேகவுடா என்ற கணவனும், இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஹெங்கேரி பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் ஹரிணி கலந்து கொண்ட போது அவருக்கு யசஸ் (25) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் முடித்துள்ள நிலையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவரும் ஹரிணியும் செல்போன் நம்பரை பரிமாறிக் கொண்ட நிலையில் நாளடைவில் அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி ஹோட்டலில் அறையை முன் பதிவு செய்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த விவகாரம் ஹரிணியின் கணவருக்கு தெரிய வரவே அவர் தன் மனைவியை கண்டித்ததோடு செல்போனையும் வாங்கிக் கொண்டார்.

இதனால் ஹரிணியால் யஸஷை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அவருக்கு பித்து பிடித்தது போல் ஆகியுள்ளது. பின்னர் ஹரிணி தன் கணவனிடம் இனி தவறு செய்ய மாட்டேன் என மன்னிப்பு கேட்டதால் பின்னர் செல்போனை அவர் கொடுத்துள்ளார். ஆனால் மீண்டும் ஹரிணி தன் காதலனுடன் பேசினார். அப்போது வாலிபர் மீண்டும் ஹோட்டலில் அறை எடுத்து அவரை வரவழைத்தார். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்த நிலையில் பின்னர் அவர் ஹரிணியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அவர்களின் அறை கதவு நீண்ட நேரமாக திறக்காததால் சந்தேகம் அடைந்த ஹோட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுக்கவே அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது ஹரிணி சடலமாக கிடந்தது தெரியவந்தது. அவரை 17 முறை கத்தியால் குத்தி கொன்றதும் தெரிய வந்தது.

அதாவது தன்னுடைய கணவனின் பேச்சை கேட்டு ஹரிணி விலகி செல்வதாக வாலிபர் நினைத்த நிலையில் பிளான் போட்டு கத்தியோடு அவரை தீர்த்து கட்டுவதற்காக ஹோட்டலுக்கு வரவழைத்துள்ளார். அங்கு இது பற்றி வாலிபர் கேட்டபோது ஹரிணிக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கோபத்தில் 17 முறை கத்தியால் கள்ளக்காதலியை குத்தி கொலை செய்துவிட்டார்.

தற்போது வாலிபரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.