“இந்தியா பிகினர்ஸ்கான நாடு இல்லை” (India is not for beginners) என்ற வாசகத்திற்கு உயிர் கொடுக்கும் வகையில் ஒரு ருசிகர சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. வழக்கமாக ஹெல்மெட் போடாமல் போலீஸிடம் சிக்கினால் அபராதம் கட்டுவது அல்லது வண்டியை விட்டுவிட்டு ஓடுவதுதான் நடக்கும். ஆனால், இங்கே ஒரு இளைஞர் செய்த காரியம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சாலையில் ஹெல்மெட் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார் அந்த இளைஞரை மறித்துள்ளனர். ஹெல்மெட் இல்லை என்பதை உணர்ந்த அவர், போலீஸிடம் வாக்குவாதம் செய்யாமல் அங்கேயே நின்றபடி ‘Blinkit’ செயலியில் ஒரு ஹெல்மெட்டை ஆர்டர் செய்துள்ளார்.

​அதிசயமாக, அடுத்த சில நிமிடங்களிலேயே டெலிவரி பாய் அந்த இடத்திற்கு வந்து ஹெல்மெட்டை டெலிவரி செய்துள்ளார். போலீஸார் கண் முன்னே அந்த ஹெல்மெட்டை அணிந்துகொண்டு, எந்த அபராதமும் கட்டாமல் அந்த இளைஞர் கெத்தாகச் சென்றது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. “பிரச்சனை என்று வந்துவிட்டால் அதை எப்படிச் சமாளிப்பது என்பதில் இந்தியர்களை அடித்துக்கொள்ள ஆளே இல்லை” என இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். தொழில்நுட்பமும், சமயோசித புத்தியும் சேர்ந்தால் எந்த அபராதத்தையும் தவிர்க்கலாம் என்பதற்கு இந்த ‘பிளிங்கிட்’ சம்பவமே சாட்சி!