மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் கோவிந்தன் குட்டி. இவர் ஆனந்த பத்ரம் என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்த பிரபலமான கோவிந்தன் குட்டி பல தொலைக்காட்சி தொடர்களை தொகுத்து வழங்குவதோடு, குட்டி எம்டி என்ற youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் நடிகர் கோவிந்தன் குட்டி மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். இந்த பெண் நடிகர் கோவிந்தன் குட்டி தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இது குறித்து வெளியில் சொன்னால் பாலியல் பலாத்காரம் செய்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியதாகவும் புகார் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் கோவிந்தன் குட்டிக்கு நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது. இதை எதிர்த்தும் அந்த பெண் வழக்கு தொடர்ந்தார். இந்த பெண்ணை தொடர்ந்து கோவிந்தன் குட்டி மீது மற்றொரு பெண்ணும் பாலியல் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாகவும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் நடிகர் கோவிந்தன் குட்டி மீது அடுத்தடுத்து 2 பெண்கள் பாலியல் புகார் கொடுத்தது மலையாள திரை உலகில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.