திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்லகம் மேல தெருவில் ராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரஞ்சித் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் இருந்த ரஞ்சித் குமாரை அவரது தாய் சுகந்தி வேலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். நேற்று முன்தினம் சுகந்தி கூலி வேலைக்கு செல்ல புறப்பட்டு கொண்டிருந்தார். அப்போது ரஞ்சித் குமார் தனது தாயிடம் பணம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு சுகந்தி பணம் தர முடியாது நீ சம்பாதித்து செலவு செய்து கொள் என திட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த ரஞ்சித் குமார் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ரஞ்சித் குமார் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.