அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், அதிவேக நெடுஞ்சாலையின் நடுவே லாரி ஒன்று விசித்திரமான நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தில் வேகமாகப் பரவி வரும் அந்தக் காணொளியில், நெடுஞ்சாலையின் தடுப்புகளுக்கு இடையே ஒரு லாரியின் கேபின் பின்னோக்கித் திரும்பிய நிலையில் நிற்கிறது. சிறிது நேரத்தில், தலைப்பாகை அணிந்த ஒரு நபர் லாரியில் இருந்து இறங்கி வாகனத்தின் பின்புறம் நடந்து செல்கிறார்.

இந்தச் சம்பவத்தைப் படம்பிடித்த நபர், அந்த ஓட்டுநரைப் பார்த்து , “அங்கே நிறுத்த முடியாது அண்ணே” என்று கூறுவது வீடியோவில் தெளிவாகக் கேட்கிறது.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இணையவாசிகளிடையே பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன: ஓட்டுநர் நெடுஞ்சாலையின் நடுவே சட்டவிரோதமாக ‘யு-டர்ன்’ (U-Turn) எடுக்க முயன்றதால் லாரியில்  சிக்கிக்கொண்டது என்றும், இது மற்ற வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல் என்றும் ஒரு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.

மற்றொரு தரப்பினரோ, லாரியில் ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறு அல்லது தொழில்நுட்பச் சிக்கல் காரணமாகவே ஓட்டுநர் அங்கு நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கலாம் என்று வாதிடுகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து கலிபோர்னியா போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடமிருந்து இதுவரை முறையான விளக்கம் எதுவும் வரவில்லை. ஓட்டுநர் வேண்டுமென்றே விதிகளை மீறினாரா அல்லது எதிர்பாராத சூழ்நிலையால் இது நடந்ததா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியான பின்னரே உண்மை நிலை தெரியவரும்.

ஆதாரமற்ற விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோ, வெளிநாடுகளில் பணியாற்றும் இந்திய ஓட்டுநர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்த புதிய விவாதத்தை இணையத்தில் கிளப்பியுள்ளது.