2025 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

செப்டம்பர் 14-ம் தேதி நடைபெற்ற இந்தப் போட்டிக்காக டெல்லி, காஷ்மீர், துபாய் என பல இடங்களில் தீவிர விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்திய வீரர்கள், பாகிஸ்தான் அணியுடன் கைகுலுக்க மறுத்தது புதிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனை இந்தியா 15.5 ஓவர்களில் 129 ரன்கள் எடுத்து இலக்கை எளிதாக கடந்தது.

ஆனால் போட்டியின் முடிவில், இந்திய வீரர்கள் பாரம்பரியமாக கைகுலுக்காமல் நேராக டிரஸ்ஸிங் ரூமுக்குள் சென்று கதவை மூடிக் கொண்டனர். பாகிஸ்தான் வீரர்கள் கைகுலுக்க காத்திருந்த போதிலும், இந்திய வீரர்கள் யாரும் திரும்பிப் பார்க்கவில்லை.

“>

இதனால், பாகிஸ்தான் ஊடகங்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கடும் விமர்சனங்களை எழுப்பினர். குறிப்பாக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயாப் அக்தர், “வீட்டில்கூட சண்டை ஏற்படலாம், ஆனால் இது ஒரு விளையாட்டு போட்டி. அரசியல் செய்ய வேண்டாம்” எனக் கடுமையாகக் கூறியுள்ளார்.

இந்த ‘நோ ஹேண்ட்ஷேக்’ சர்ச்சையின் பின்னணியில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள கவுதம் கம்பீர் தான் இந்த முடிவை எடுக்க காரணம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான் வீரர்களுடன் எந்தவிதமான வாதத்திற்கும் இடமளிக்காமல், கைகுலுக்காமல் செல்ல வேண்டுமென வீரர்களுக்கு கம்பீர் ஆலோசனை வழங்கியதாக டெலிகாம் ஏஷியா செய்தி வெளியிட்டுள்ளது.  தற்போது இந்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.