எடப்பாடி தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டின் தற்போதைய தவெக அரசு அறிவித்துள்ள நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை என்பது அப்பட்டமான மக்கள் ஏமாற்று வேலை என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டில் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது என்று மேடைக்கு மேடை பேசிவிட்டு, மறுபுறம் தவெக சார்பில் ஏகப்பட்ட கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள் என்று சுட்டிக்காட்டினார்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2500 ரூபாய், ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர், ஏழைப் பெண்களுக்குத் திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம், பட்டுச்சேலை மற்றும் பிறக்கும் குழந்தைக்குத் தங்க மோதிரம் என்றெல்லாம் ஆசை வார்த்தை கூறினார்கள் என்று எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டார். ​இன்றைக்கு விஜய் ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் ஆகியும் எந்த ஏழைப் பெண்ணுக்காவது பட்டுச்சேலையோ, தங்க மோதிரமோ கொடுத்தார்களா என்று மேடையிலேயே அதிரடிக் கேள்வி எழுப்பினார்.

ஒரு குடும்பத் தலைவிக்கு மாதம் 2500 ரூபாய் வீதம் தமிழ்நாட்டில் உள்ள ஒன்றரை கோடி பேருக்கு வழங்க வேண்டும் என்றால், மாதம்தோறும் 45,000 கோடி ரூபாய் நிதி தேவைப்படும் என்று கணக்கைப் போட்டுக் காட்டிய எடப்பாடி பழனிசாமி, ஏற்கனவே 10 லட்சம் கோடி கடன் என்று சொல்லிவிட்டு இவ்வளவு பணத்திற்கு விஜய் எங்கே போவார் என்று சாடினார். மக்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல், அதில் இருந்து தட்டிக்கழிப்பதற்காகவே இப்போது ‘வெள்ளை அறிக்கை’ என்ற புதிய நாடகத்தை நடத்தி மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.