ஐபிஎல் 2026 தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில், டெல்லி கேபிடல்ஸ் (DC) அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது வாய்ப்புகளைத் தானே கோட்டைவிட்டது. அதிரடி ஆட்டத்திற்குப் பெயர்போன பெங்களூரு அணியை இந்த சீசனில் முதன்முறையாக 200 ரன்களுக்குக் கீழ் கட்டுப்படுத்தி டெல்லி அணி சாதனை படைத்துள்ளது.

ஆட்டத்தின் தொடக்கத்தில் விராட் கோலி மற்றும் பில் சால்ட் ஜோடி கொடுத்த அதிரடித் தொடக்கத்தைப் பார்த்தபோது, ஆர்சிபி அணி 215 ரன்களைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டெல்லி அணியின் துல்லியமான பந்துவீச்சால் ஆர்சிபி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்தது. குறிப்பாக, கடைசி 5 ஓவர்களில் (16-20) அந்த அணி வெறும் 29 ரன்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. அக்ஸர் படேல், லுங்கி என்கிடி மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர்சிபி அணியின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினர்.

இந்தப் போட்டியில் அதிரடி காட்டிய டிம் டேவிட், ஐபிஎல் தொடரில் தனது 1000 ரன்களைக் கடந்தார். மிகக் குறைந்த பந்துகளில் (560 பந்துகள்) இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதன்மூலம் டிராவிஸ் ஹெட், பில் சால்ட், கிளாசன் மற்றும் சேவாக் ஆகியோரின் சாதனையை அவர் முறியடித்தார். ஆண்ட்ரே ரசல் (545 பந்துகள்) முதலிடத்தில் உள்ளார். டிம் டேவிட் அடித்த ஒரு பிரம்மாண்ட சிக்ஸரைக் கண்டு, பீல்டிங் செய்து கொண்டிருந்த விராட் கோலி வாயடைத்துப் போய் ஆச்சரியத்தில் உறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

ஆட்டத்தின் 20-வது ஓவரில் ஒரு விசித்திரமான ரன்-அவுட் நிகழ்ந்தது. லுங்கி என்கிடி வீசிய வைடு பந்தை க்ருணால் பாண்டியா அடிக்கத் தவறினார். ஆனால், எதிர்முனையில் இருந்த ஜிதேஷ் சர்மா ரன் ஓட ஓடிவந்தார். க்ருணால் ஓடி வருவதற்குள் ஜிதேஷ் ஸ்ட்ரைக்கர் முனைக்கு வந்துவிட, விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் பந்தை என்கிடியிடம் எறிய, க்ருணால் ரன்-அவுட் ஆனார். ஜிதேஷ் சர்மாவின் இந்த அவசரமான முடிவால் அதிருப்தி அடைந்த க்ருணால் பாண்டியா, மைதானத்திலேயே தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தினார். பெங்களூரு அணி நிர்ணயித்த 176 ரன்கள் என்ற இலக்கை நோக்கித் தற்போது டெல்லி அணி விளையாடி வருகிறது.